சனி, 25 டிசம்பர், 2010

ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பு

ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பு - முனைவர் பா.இறையரசன் இந்து மதத்தினுடைய மொழி சமற்கிருதம் ஆகும். கி.பி.எட்டாம் நூற்றாண்டில்தான் இந்து மதம் என்று தனி நிறுவன உருவாக்கம் பெற்றது. அதற்குமுன் தாய்த்தெய்வம், சிவன், திருமால், இந்திரன், வருணன் எனப் பல கடவுளரை வணங்குவதாகத் தமிழர்களின் (இந்தியத்) தொல்மதம் இருந்தது. தமிழர் மதத்தில் ஆரியக் கலப்புற்ற நிலையில் தொல்மதத்திற்கு உள்ளேயே வேத ஆரியர் தனியே இயங்கி வந்தனர். அவர்கள் மொழி வேதமொழி எனப்பட்டது. ஆரியரின் வேள்விக் கொள்கையையும், உயிர்பலியையும் எதிர்த்து வடநாட்டில் திராவிடர்களால் (தமிழர்களால்) தோற்றுவிக்கப்பட்டவையே ஆசீவகமும் சமணமும் பெளத்தமும். அவை பாலிமொழியையும் பின்னர் அதிலிருந்து கிளைத்த பிராகிருத மொழியையும் பின்பற்றின. இவை பாகத மொழிகள் (மாகதி, அர்த்தமாகதி) எனப்பட்டன. இவற்றிலிருந்து பிற்காலத்தில் செய்யப்பட்ட மொழியே சமற்கிருதம் ஆகும். ஆரியர்களிடம் எழுத்துமொழி இல்லாததால் வாய்மொழி வழிபாடே - ஓதுவது மட்டுமே – இருந்தது சிந்துவெளி காலத்து தமிழர்களின் எழுத்துச் சான்றுகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை தமிழகத்து அருகன்மேடு, கீழ்வாலை, கழுகுமலை எழுத்துகளை ஒத்துள்ளன. இப்பழைய தமிழ் எழுத்து முறை வடநாட்டில் பிராமி என்றும், தென்னாட்டில் தமிழி என்றும் குறிக்கப்படுகிறது. வடபிராமி தென்பிராமி என்றும் கூறுவர். வேதமொழியும் சமற்கிருதமொழியும் ஒன்றல்ல. கி.பி.முன்றாம் நூற்றாண்டிற்குப் பின்தான் சமற்கிருதம் எழுத்துருவம் பெற்றது. குப்தர் காலத்தில் (கி.பி.350 –க்குப் பின்) சமற்கிருதம் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இக்காலத்தில்தான் இராமாயணமும் பாரதமும் எழுத்து வடிவம் பெற்றன. இதற்கு முன்னாலேயே மதுரை தமிழ்ச் சங்கத்தில் கி.பி.50 அளவில் வாய்மொழியாக வடமொழியில் வழங்கி வந்த பாரதத்தை பெருந்தேவனார் என்பவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். வாய்மொழியாக வழங்கி வந்த வேதங்கள் எழுதப்படக் கூடாது என்பதையும் மீறி கி.பி.14 – ஆம் நூற்றாண்டில் தென்னாட்டில் சாயானாச்சாரியார் என்பவர் எழுத்து வடிவம் கொடுத்தார். (வே.தி.செல்லம்- “தமிழக வரலாறும் பண்பாடும்”-பக்கம் 69) கிரந்தம் என்பது ஒரு மொழி இல்லை. அது பேச்சு வழக்கிலும் இருந்தது இல்லை. சமற்கிருதம் எவ்வாறு ஒரு நாட்டிற்கோ இனத்திற்கோ சொந்தமில்லா மொழியோ அதைப்போன்றதுதான் கிரந்தமும் . ஆனாலும் கிரந்தம் தமிழர்கள் தோற்றுவித்ததுதான். சமற்கிருதத்தைத் தமிழில் எழுதும் போது ஆரியருடைய வகை ஒலிகளை குறிக்க 31 குறியீடுகளைத் தமிழ் எழுத்துகளோடு சேர்த்து வழங்குவதே கிரந்தம் ஆகும். தமிழ் எழுத்துகளையும் தமிழ் எண்களையும் தவிர வகை ஒலி எழுத்து, கூட்டெழுத்து ஆகியவற்றுடன் 89 குறியீடுகள் கிரந்தத்தில் உள்ளன. கிரந்த எழுத்துமுறை கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்துதான் பல்லவர் சாதவாகனர் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. தமிழ் எழுத்துகளால் தமிழர்கள் உருவாக்கிய இக்கிரந்த எழுத்துகள் சமற்கிருதத்தை எழுதப் பயன்படுத்தப்பெற்றவை; இவற்றைத் தமிழ் மொழிக்குள் புகுத்துவதை நாம் எதிர்க்கிறோம். வடமொழி ஒலிகளைக் குறிக்க ஏற்படுத்தப்பட்ட 31குறியீடுகளையும் தமிழில் சேர்த்தால் தமிழ்கிரந்தமாகத் திரிந்து போய்விடும். வடமொழி ஒலிகளையும் அவற்றைக் குறிக்கக் கிரந்த எழுத்துகளையும் ஏற்றதுடன் மிகுதியான வட சொற்களையும் ஏற்றதால்தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியன தோன்றின; திரிந்த / திருந்தாத் திராவிட மொழிகள் தோன்றின. கிரந்தத்தில் விடுபட்டுள்ள தமிழின் சிறப்பெழுத்துகளாகிய “ ற,ன, ழ, எ. ஒ” ஆகியவற்றைச் சேர்த்துவிட்டால் மின்னஞ்சல் மின்னூல்கள், கணினிப்பயன்பாடு, நூல் அச்சிடல் , மடல்கள் ஆகியவற்றைத் தமிழர்கள் இனிமேல் கிரந்தத்தில் செய்வர் என்று நாக.கணேசன் ஒருங்குகுறி ஆணையத்துக்கு எழுதியுள்ளார். தமிழில் விடுபட்டுள்ள கிரந்தக்குறியீடுகள் 26-ஐயும் “தமிழ் விரிவு” ( Extended Tamil) எனத் தமிழ் ஒருங்குறியில் சேர்க்கவேண்டும் என்று ஒருங்குகுறி ஆணையத்துக்குத் திட்டமெழுதியுள்ள இரமண சர்மா , தேவநாகரியிலும் கிரந்தத்திலும் உள்ள இந்து சமய வழிபாட்டுப் பாடல்களையும் சடங்கு முறை நூல்களையும் தமிழுக்குள் கொண்டுவந்து விடலாம் என்கிறார். காஞ்சி சங்கராச்சாரியாரின் மடத்தைச் சார்ந்த சமற்கிருத அறிஞர்கள் தமக்கு துணை இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்களர்களால் இலங்கைத் தீவின் ஒரு மூலைக்கு விரட்டப்பட்ட ஈழத்தமிழர்களில் ஒரிலக்கம் பேருக்கு மேல் 3 நாளில் கொன்று குவிக்கப்பட்டார்களே! அதேபோல சர்மா, கணேசன் இரண்டு பேருமே ஈராயிரம் ஆண்டுகளாக படிப்படியே இந்திய தீபகற்பத்தின் தென்கோடி மூலைக்குள் விரட்டப்பட்டு சுருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ள தமிழர்களை - தமிழ் மொழியை - முழுதும் ஆரியமாக்கிவிட முயல்கின்றார்கள். “ஐந்தெழுத்தால் ஒருபாடை என அறையவும் நாணுவர் அறிவுடையோரே” என்று ஒரு தமிழனே (ஈசானதேசிகர்) தமிழைத் தாழ்த்தி எழுதியது போல, சர்மாவும் தமிழின் சிறப்பெழுத்துகள் “ற, ன, ழ, எ, ஒ” சிறப்பெழுத்துகள் ஐந்தும் கிரந்த எழுத்துகளோடு இருந்தால் அசிங்கம் (absurrd) என்று எழுதியுள்ள சர்மா அவற்றைச் சேர்க்க முயலும் கணேசனுடன் சண்டையிட்டு இப்போது வெளிப்பட்டுள்ளார். கிரந்தத்தில் தமிழின் சிறப்பெழுத்துகள் ஐந்தையும் சேர்க்கக்கூடாது என்று தமிழக அரசு 06–11–2010 அன்று இந்திய அரசுக்கு எழுதியது. இதை தவறாகப் புரிந்து கொண்டு தினமணி 09-11-2010 அன்று ஆசிரிய உரை (தலையங்கம்) எழுதியது. ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ என்ற 5 கிரந்த எழுத்துகளைத் தமிழ் ஒருங்குகுறியில் சேர்க்கக் கூடாது என்றும் அதுவரை தமிழ் ஒருங்குகுறியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எழுதியதாகக் குற்றம் சாட்டியது. “தமிழில் பஞ்சாங்கம், ஜோதிட நூல்கள் அச்சிடுவோர் இந்தச் சொற்களை, வரிவடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, இவை கணினியில் இடம் பெறாமல் தடுப்பது முறையாகுமா?” என்று தினமணி எழுதியது. ஆனால் இந்த 5 எழுத்துகளுக்குமேல் விடுபட்டுள்ள 26 கிரந்த எழுத்துகளையும் சேர்க்க வேண்டும் என்பதுதான் சர்மாவின் கோரிக்கை. பஞ்சாங்கம், சோதிடம் ஆகியவற்றுடன் ஈட்டுரை பகவத்கீதை முதலிய வடமொழி நூல்கள் ஆகியவற்றை அச்சிட இந்த எழுத்துகள் தேவை என்று சர்மா கூறுகிறார். மறுபடியும் தமிழ் மொழியை மணிப்பவழ (பிரவாள) நடையாக மாற்ற வேண்டும் என்பது அவரது விருப்பம். வடமொழிக் கலப்பில் இருந்து தமிழை மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் மீட்டெடுத்து உள்ளது. இந்நிலையில் ஆங்கிலவழிக் கல்வியால் ஆங்கிலக் கலப்பு மொழி (தமிங்கிலம்) பெருகி வருகிறது. இத்துடன் கிரந்த வேற்றொலிகளைக் கலந்தால், மலையாளம் போல் தமிழ் கிளை மொழியாகிப் பின்னர் கலவைமொழி (கிரையோல்) ஆகிவிடும். ஏற்கனவே “கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா” சீரிளமை கொண்ட தமிழ் மொழியானது வடமொழி, ஆங்கிலக் கலப்பால் சிதைந்து வருவதை எண்ணி வருந்தியும், “தமிழினி மெல்லச் சாகும்” என்று கூறுபவர்களைப் பார்த்துப் பேதை என்று சாடியும் வருகிறோம். கிரந்த எழுத்துகள் முழுவதையும் சேர்த்து தமிழில் வடமொழிக் கலப்பை மிகுதி ஆக்கினால் மணிப்பவழம் (பிரவாளம்) இறுதியில் ‘மன்ய பிரவாளம்’ (மணிப்பவழம்) என வடமொழியும், ஆங்கிலமும் 90 விழுக்காடும், தமிழ் 10 விழுக்காடும் கலந்து பேச்சிலும் கிரந்தத் தமிழ் எழுத்திலும் வழங்கத் தொடங்கிவிடும். தமிங்கிலத்தில் (வியூயர்ஸ் கால் பண்ணுங்க, நியூசாங் வேணுமா... முதலிய பேச்சு வழக்குகளும், ciniமா, 4G செல்போன், குட்டீஸ்கள், ஐடியாக்கள்) இன்றுள்ள கலப்பு கிரந்தத் தமிழில் வரும். பிறந்த குழந்தையையும் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்துவிடுகிறோம். சிறுகுழந்தை தவறி விழுந்து அம்மா என்று அழுதபோது தமிழில் பேசாதே என்று மழலைப் பள்ளி ஆசிரியர் ஓங்கி அறைகிறார். “வீட்டில் தமிழில் பேசாதீர்கள்! நீங்கள் ஆங்கிலத்தில் பேசினால்தான் உங்கள் பிள்ளைகள் நன்றாகப் பேசும். ஆஸ்திரேலியாவில் சரியாக ஆங்கிலம் பேசாத 450 இந்தியர்களுக்கு வேலை போய்விட்டது தெரியுமா?” என்று தலைமை ஆசிரியர் கூறுகிறார். இனி வடமொழியில் பேசுங்கள் என்று கூறும் காலம் வந்துவிடும். வேலை வாய்ப்பு, வணிகமென்று ஆங்கிலம் புகுந்தது போல மதத்தை வைத்து வடமொழி புகுந்துள்ளது. பாலி, பிராகிருதம், பின்னர் சமற்கிருதம் ஆகியவை மதத்தின் மூலம் பல்லவர் ஆட்சிக் காலத்தில் செல்வாக்குப் பெற்று இலக்கியங்களிலும் சமய நூல்களிலும் ஆட்சியிலும் கல்வெட்டு செப்பேடுகளிலும் இடம் பெற்று இருந்தன. இதனை மாற்றிச் சமய எழுச்சி காலத்தில் தேவாரம் முதலியவைத் தோன்ற, அவை மறைக்கப் பட்ட போது, அவற்றை மீட்டெடுத்ததுடன் கல்வெட்டு செப்பேடுகளிலும் இலக்கியங்களிலும் தமிழை வளரச் செய்தவன் பேரரசன் இராசராசன். தூய தமிழில் அமைந்த ஆழ்வார் பாடல்களுக்கும் ஈட்டுரை என வடமொழியை மிகுதியாகக் கலந்து மணிப்பவழ நடையை திணித்தனர். அது தோல்வியுற்றது. இப்போது ஆங்கிலச் சொற்களையும் கிரந்த எழுத்துகளையும் கலந்து எழுதவேண்டும் என்போர் புறப்பட்டு உள்ளனர். தமிழ் எழுத்துகள் அங்கு சென்றால், தமிழுக்கு எழுத்து முறையே கிடையாது, வடபிராமியில் இருந்துதான் வந்தது என்று கூறிவிடுவார்கள். தமிழுக்கு முகமே கிடையாது என்று எழுதியவர்கள் அல்லவா! அதேபோல் தமிழில் கிரந்த எழுத்துகளும் அவற்றின் ஒலிகளும் சேர்ந்தால், தமிழ்மொழி விரைவில் தமிங்கிலமும் சமற்கிருதமும் கலந்த கிரந்தமொழி ஆகிவிடும். பாவாணர் சொல்வதுபோல் இரட்டைமடி மணிப்பிரவாளம் ஆகிவிடும். எனவே, நாம் தமிழில் கிரந்த எழுத்துகள் தமிழில் சேர்வதையும் எதிர்க்கிறோம் தமிழின் 5 சிறப்பெழுத்துகள் கிரந்தத்திற்குச் செல்வதையும் எதிர்க்கிறோம். நன்றி: தென்மொழி [தி.பி.2041,சிலை (திசம்பர்,2010) திங்களிதழில் வெளிவந்த கட்டுரை.]

வெள்ளி, 17 டிசம்பர், 2010

சங்க இலக்கியங்கள் தேவையில்லையா?

சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் சுவையற்றன என்றும் மிகச்சில மட்டுமே கவிதைத்தன்மை கொண்டவை என்றும் திறனாய்வாளர்கள் சிலர் பேசிவருகின்றனர். அரசர்களைப் புகழும் அவை , மக்களைப் பாடாததால் இன்றைய மக்களுக்குப் பயனில்லை என்றும் ஆற்றுப்படை நூல்கள், சேர அரசர்களைப் பாடும் பதிற்றுப்பத்து முதலியன அறவே தேவையற்றன என்று ஆகிவிடும் என்றும் கூறுகின்றனர். அண்மையில் கல்லூரி ஒன்றில் நடந்த கருத்தரங்கில் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற ஒருபெண்மணி, சங்கக்காலத்தில் நில உடைமை முதலாளித்துவத்தை வளர்த்துவிட்ட அரசர்களையும் பணக்காரர்களையும் பொய்யுரைகளால் புகழ்ந்து பாடித் தம் வயிற்றை நிரப்பிய வறிய புலவர்கள் பாடிய பாடல்களே சங்க இலக்கியங்கள்; இவை சமுதாயச் சிந்தனை அற்றவை என்று புரட்சிமுழக்கம் செய்தார். கவிதைத் தன்மை, மார்க்கசியம், வர்க்கம், முற்போக்கு என்றெல்லாம் இவர்கள் கூறுவன வெற்றுச் சொற்கள். திறனாய்வியல் கொள்கைகளையும் பெரியாரியம், மார்க்கசியம் , காந்தியம் போன்ற கோட்பாடுகளையும் படிக்காமல் தங்களை மிகப் பெரிய முற்போக்குச் சிந்தனையாளர்களாகக் காட்டிக் கொள்வதற்காகப் பல தளங்களில் சிதைக்கும் தாக்குதல் பேச்சுக்களைப் பேசியும் எழுதியும் வருகின்றனர். தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் மிகத் தொன்மையான சங்க இலக்கியங்களில் புறநானூற்றுப் பாடலை வெற்றுச் செய்யுள் என்று கூறுவதும், கவிதை அல்லாததால் இலக்கியத்துக்குச் சுமை என்றும் மாணவர்க்குப் பாரம் என்று கூறுவதும் தாயையும் தந்தையையும் பாரம் என்று கூறி முதியோர் இல்லத்துக்கு விரட்டும் தன்மையாகும். “இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த வாழ்க்கை முறை மாறிவிட்ட சூழ்நிலையில் இத்தகைய செய்யுள்களின் தேவை என்ன ?” - என்கின்றனர் இப்புதிய திறனாய்வாளர்கள். புராண, வரலாற்றுப் பாத்திரங்களின் உணர்வுகளையும் வாழ்க்கை நடைமுறைகளையும் அக்கால அரசர்களின் செயல்களையும் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னர் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளையும் முன்னைய வாழ்க்கை முறைகளையும் பாடும் இலக்கியங்களைச் சுமை என்று எந்த நாட்டு மக்களும் ஒதுக்கி விடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்க்கைமுறை என்பதால் கிரேக்கக் காப்பியங்களை யாரும் சுமை என்று கூறவில்லை. வேல் எடுத்துப் போர் புரிவதைக் கூறும் இப்பாடல் சுமை என்றால், வில் எடுத்துப் போர்புரியும் கதைகூறும் கம்பராமாயணம் சுமையாகுமா? இராண்டாயிம் ஆண்டுகள் முன் பாடியதால் அச்சமுதாய முறை மாறிவிட்டது என்றால், இருநூறு ஆண்டுகள்முன், ஏன், இருபது ஆண்டுகள் முன் பாடியனவும் சமுதாய முறை மாறிவிட்டதால் பயனற்றுப் போய்விடுமே! இந்திய விடுதலைக்காகப் பாடிய பாரதியின் ‘தேசியப் பாடல்கள் போய்விடும்; பக்திப் பாடல்கள்தான் நிலைக்கும்’ என்று சிலர் கூறினர். தேசியப் பாடல்கள் இன்று ஒதுக்கப்பட்டு விட்டனவா? பிசித் தீவில் இந்தியப் பெண்களின் கண்ணீர் பற்றிப் பாரதி பாடிய பாடலுக்கு இன்றும் நாம் கண் கலங்குகிறோம். மொழி, இனம், மதம், காலம், வாழ்வியல்முறை – எல்லாம் மீறி உருவாகுவதே இலக்கியம். டென்னிசன் என்றோ எங்கோ அறுவடை செய்யும் தம் நாட்டுப் பெண்ணைப் பற்றி பாடியது, நம் நாட்டுப்புறப் பெண்களை நினைவூட்டுகிறது. அயல்நாட்டு இலக்கியங்களில் இருநூறு ஆண்டுகட்கு முற்பட்ட வாழ்க்கை முறை அவர்களுக்கே கூட மாறிப்போய்விட்டது; நாமும் அப்பாடல்களில், நம் நாட்டு இன்றைய கால வாழ்க்கை முறையோ, அரிசிச்சோறு உணவு முறையோ, சேலை வேட்டி உடைமுறையோ இல்லாததற்காக அவை கவிதை இல்லை என்று ஒதுக்குவதில்லை; தலைக் கவசமும் (ஹெல்மட்) குதிரைப் போரும் பற்றி அவை பாடுவதால் இலக்கியம் இல்லை என்று கருதுவதில்லை. புறநானூற்றில் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனும் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் சோழன் நலங்கிள்ளியும் பாடியுள்ள வஞ்சினக் காஞ்சிப் பாடல்களும், சூலியசு சீசர் என்னும் ஆங்கில நாடகத்தில் அந்தோனியின் வீரவுரையும், மனோன்மணியம் நாடகத்தில் சீவகனுடைய வீரவுரையும் படிக்கும்போது அவற்றின் இலக்கியத் தன்மையை காலம், இனம், மொழி கடந்து போற்றுகிறோம். அக்காலப் போர்முறை இன்று இல்லை என்பதால் இவை கவிதை இல்லை என்று நாம் ஒதுக்குகிறோமா?
வாழ்வியல் கூறும் “ஈன்று புறந்தருதல்...” என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலைச் செய்யுள் என்றும் சுமை என்றும் ஒதுக்க முடியுமா? சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் செய்ய வேண்டிய கடமைகளை உணர்த்தி, மறக்குலத்தாய் ஒருத்தி பாடிய இப்பாடல் எக்காலத்துக்கும் உரிய இலக்கியத் தன்மை கொண்டது. ஒரு தாய்க்கு எந்த அளவுக்குக் குடும்பப் பொறுப்பும் நாட்டுப் பொறுப்பும் அன்று இருந்தன என்பதையும் இன்றும் இருக்க வேண்டும் என்பதையும் இப்புறநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது. அரசன், கொல்லன், வேல் முதலியன இன்று – அரசு, தொழிற்சாலை, கருவி முதலியவற்றைக் குறித்து, நமக்குக் கடமை உணர்வைத் தருவனவே. எனவே இப்பாடல் கவிதை ஆகாதா? சுமையா? கவிதை என்பது வரலாற்றுத் தகவலையோ சமுதாய அறத்தையோ தரக் கூடாதா? “இளையோர் சூடார்....” என்ற புறநானூற்றுப் பாடலில்” சாத்தன் ஆகிய தலைவன் இறந்தபின், முல்லை மலரே, நீ ஏன் பூத்துள்ளாய்?” என்ற கருத்து சோக அனுபவம் என்பதால் கவிதை ஆகிறது. ஆனால் நாட்டுத் தலைவனை இழந்த துயரமும் காதலியை இழந்த துன்பமும் மட்டுமே வாழ்க்கை உணர்ச்சிகளா? அவற்றைப் பாடுவன மட்டுமே கவிதையா? “பாறுமயிர்க்குடுமி எண்ணெய் நீவி ஒரு மகனல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் “செல்கென விடுமே” என்னும் புறநானூற்றுப் பாடலிலும், “தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை” என்னும் பாரதிதாசன் பாடலிலும் கவிதையியலை உணர இயலாதா? எல்லோருக்கும் எல்லாப் பாடல்களும் சுவைக்கும் என்று சொல்ல முடியாது. அவரவர் அணுகுமுறை, கொள்கை, தரம், தேவை, விருப்பம் முதலியன வேறுபடுகின்றன. ஆயின் இலக்கியத் திறனாய்வாளன் சார்பு இல்லாமல் விழிகாட்ட வேண்டும். புதுமைப்பித்தன், நகுலன், வாசுகி, குட்டிரேவதி முதலியவர்கள்தான் சிறந்த கவிஞர்கள் என்கின்றனர். இவர்கள் எதைக் கவிதை என்று ஏற்கிறார்கள் என்று உணரலாம். பாரதி, பாரதிதாசன் ஆகியோரையும் அவர்களுக்கு முந்தையவர்களையும் மூட்டைகட்டி எறிந்து விடலாமா? இக்காலக் கவிஞர்களிலும் சுரதா, தமிழன்பன், வைரமுத்து, மேத்தா, அப்துல்ரகுமான், இன்குலாப், மீரா, சிற்பி, புலமைப்பித்தன், நா.காமராசன், பொன்னடியான், தமிழ்நாடன் ஆகியோர் கவிஞர்கள் இல்லையா? இவர்கள் சிறந்த கவிதை என்று காட்டும் புதுக்கவிதையாகிய உரைவீச்சுகள் புறநானூற்றுப் பாடல்களின் முன், இன்னும் சொன்னால், புறநானூற்றின் இறுதிப் பகுதியில் வரும் வரி சிதைந்த பாடல்கள் ஏதேனும் ஒன்றின்முன்கூட, நிற்கத் தகுதி அற்றவை. இக்காலப் புதுக்கவிதை என்னும் உரைப் பாக்களில் பல நல்ல கருத்துகளும் சில நல்ல உருவகங்களும் கொண்ட சில தேறுகின்றன. அதற்காக அவை மட்டுமே கவிதைகள், சங்க இலக்கியங்கள் இல்லை என்று தமிழ் மக்களுக்குத் தவறான வழிகாட்ட வேண்டிதில்லை. வெற்றுச் சொல்லடுக்குகளும், எல்லையற்ற பிறமொழிச் சொற்களும், தெளிவில்லாத படிமங்களும், இருண்மையும், தத்துவம் போன்ற பிதற்றல்களும் இன்று புதுக்கவிதை என்று பெருகிவரும்போது, அவற்றை இனங்காட்டவோ திறனாயவோ திருத்தவோ முற்படாமல், இரண்டாயிரம் ஆண்டுகளாக காலத்தை, கரையானை, எதிரிகளை வென்று நின்று வாழும் சங்கத்தமிழ் இலக்கியங்களைக் குறைசொல்ல வேண்டாம். - முனைவர் பா.இறையரசன் காற்றுவெளி திசம்பர் 2010 இதழில் வெளிவந்தது: http://kaatruveli-ithazh.blogspot.com/ *****************************************************