சனி, 25 டிசம்பர், 2010

ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பு

ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பு - முனைவர் பா.இறையரசன் இந்து மதத்தினுடைய மொழி சமற்கிருதம் ஆகும். கி.பி.எட்டாம் நூற்றாண்டில்தான் இந்து மதம் என்று தனி நிறுவன உருவாக்கம் பெற்றது. அதற்குமுன் தாய்த்தெய்வம், சிவன், திருமால், இந்திரன், வருணன் எனப் பல கடவுளரை வணங்குவதாகத் தமிழர்களின் (இந்தியத்) தொல்மதம் இருந்தது. தமிழர் மதத்தில் ஆரியக் கலப்புற்ற நிலையில் தொல்மதத்திற்கு உள்ளேயே வேத ஆரியர் தனியே இயங்கி வந்தனர். அவர்கள் மொழி வேதமொழி எனப்பட்டது. ஆரியரின் வேள்விக் கொள்கையையும், உயிர்பலியையும் எதிர்த்து வடநாட்டில் திராவிடர்களால் (தமிழர்களால்) தோற்றுவிக்கப்பட்டவையே ஆசீவகமும் சமணமும் பெளத்தமும். அவை பாலிமொழியையும் பின்னர் அதிலிருந்து கிளைத்த பிராகிருத மொழியையும் பின்பற்றின. இவை பாகத மொழிகள் (மாகதி, அர்த்தமாகதி) எனப்பட்டன. இவற்றிலிருந்து பிற்காலத்தில் செய்யப்பட்ட மொழியே சமற்கிருதம் ஆகும். ஆரியர்களிடம் எழுத்துமொழி இல்லாததால் வாய்மொழி வழிபாடே - ஓதுவது மட்டுமே – இருந்தது சிந்துவெளி காலத்து தமிழர்களின் எழுத்துச் சான்றுகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை தமிழகத்து அருகன்மேடு, கீழ்வாலை, கழுகுமலை எழுத்துகளை ஒத்துள்ளன. இப்பழைய தமிழ் எழுத்து முறை வடநாட்டில் பிராமி என்றும், தென்னாட்டில் தமிழி என்றும் குறிக்கப்படுகிறது. வடபிராமி தென்பிராமி என்றும் கூறுவர். வேதமொழியும் சமற்கிருதமொழியும் ஒன்றல்ல. கி.பி.முன்றாம் நூற்றாண்டிற்குப் பின்தான் சமற்கிருதம் எழுத்துருவம் பெற்றது. குப்தர் காலத்தில் (கி.பி.350 –க்குப் பின்) சமற்கிருதம் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இக்காலத்தில்தான் இராமாயணமும் பாரதமும் எழுத்து வடிவம் பெற்றன. இதற்கு முன்னாலேயே மதுரை தமிழ்ச் சங்கத்தில் கி.பி.50 அளவில் வாய்மொழியாக வடமொழியில் வழங்கி வந்த பாரதத்தை பெருந்தேவனார் என்பவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். வாய்மொழியாக வழங்கி வந்த வேதங்கள் எழுதப்படக் கூடாது என்பதையும் மீறி கி.பி.14 – ஆம் நூற்றாண்டில் தென்னாட்டில் சாயானாச்சாரியார் என்பவர் எழுத்து வடிவம் கொடுத்தார். (வே.தி.செல்லம்- “தமிழக வரலாறும் பண்பாடும்”-பக்கம் 69) கிரந்தம் என்பது ஒரு மொழி இல்லை. அது பேச்சு வழக்கிலும் இருந்தது இல்லை. சமற்கிருதம் எவ்வாறு ஒரு நாட்டிற்கோ இனத்திற்கோ சொந்தமில்லா மொழியோ அதைப்போன்றதுதான் கிரந்தமும் . ஆனாலும் கிரந்தம் தமிழர்கள் தோற்றுவித்ததுதான். சமற்கிருதத்தைத் தமிழில் எழுதும் போது ஆரியருடைய வகை ஒலிகளை குறிக்க 31 குறியீடுகளைத் தமிழ் எழுத்துகளோடு சேர்த்து வழங்குவதே கிரந்தம் ஆகும். தமிழ் எழுத்துகளையும் தமிழ் எண்களையும் தவிர வகை ஒலி எழுத்து, கூட்டெழுத்து ஆகியவற்றுடன் 89 குறியீடுகள் கிரந்தத்தில் உள்ளன. கிரந்த எழுத்துமுறை கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்துதான் பல்லவர் சாதவாகனர் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. தமிழ் எழுத்துகளால் தமிழர்கள் உருவாக்கிய இக்கிரந்த எழுத்துகள் சமற்கிருதத்தை எழுதப் பயன்படுத்தப்பெற்றவை; இவற்றைத் தமிழ் மொழிக்குள் புகுத்துவதை நாம் எதிர்க்கிறோம். வடமொழி ஒலிகளைக் குறிக்க ஏற்படுத்தப்பட்ட 31குறியீடுகளையும் தமிழில் சேர்த்தால் தமிழ்கிரந்தமாகத் திரிந்து போய்விடும். வடமொழி ஒலிகளையும் அவற்றைக் குறிக்கக் கிரந்த எழுத்துகளையும் ஏற்றதுடன் மிகுதியான வட சொற்களையும் ஏற்றதால்தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியன தோன்றின; திரிந்த / திருந்தாத் திராவிட மொழிகள் தோன்றின. கிரந்தத்தில் விடுபட்டுள்ள தமிழின் சிறப்பெழுத்துகளாகிய “ ற,ன, ழ, எ. ஒ” ஆகியவற்றைச் சேர்த்துவிட்டால் மின்னஞ்சல் மின்னூல்கள், கணினிப்பயன்பாடு, நூல் அச்சிடல் , மடல்கள் ஆகியவற்றைத் தமிழர்கள் இனிமேல் கிரந்தத்தில் செய்வர் என்று நாக.கணேசன் ஒருங்குகுறி ஆணையத்துக்கு எழுதியுள்ளார். தமிழில் விடுபட்டுள்ள கிரந்தக்குறியீடுகள் 26-ஐயும் “தமிழ் விரிவு” ( Extended Tamil) எனத் தமிழ் ஒருங்குறியில் சேர்க்கவேண்டும் என்று ஒருங்குகுறி ஆணையத்துக்குத் திட்டமெழுதியுள்ள இரமண சர்மா , தேவநாகரியிலும் கிரந்தத்திலும் உள்ள இந்து சமய வழிபாட்டுப் பாடல்களையும் சடங்கு முறை நூல்களையும் தமிழுக்குள் கொண்டுவந்து விடலாம் என்கிறார். காஞ்சி சங்கராச்சாரியாரின் மடத்தைச் சார்ந்த சமற்கிருத அறிஞர்கள் தமக்கு துணை இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்களர்களால் இலங்கைத் தீவின் ஒரு மூலைக்கு விரட்டப்பட்ட ஈழத்தமிழர்களில் ஒரிலக்கம் பேருக்கு மேல் 3 நாளில் கொன்று குவிக்கப்பட்டார்களே! அதேபோல சர்மா, கணேசன் இரண்டு பேருமே ஈராயிரம் ஆண்டுகளாக படிப்படியே இந்திய தீபகற்பத்தின் தென்கோடி மூலைக்குள் விரட்டப்பட்டு சுருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ள தமிழர்களை - தமிழ் மொழியை - முழுதும் ஆரியமாக்கிவிட முயல்கின்றார்கள். “ஐந்தெழுத்தால் ஒருபாடை என அறையவும் நாணுவர் அறிவுடையோரே” என்று ஒரு தமிழனே (ஈசானதேசிகர்) தமிழைத் தாழ்த்தி எழுதியது போல, சர்மாவும் தமிழின் சிறப்பெழுத்துகள் “ற, ன, ழ, எ, ஒ” சிறப்பெழுத்துகள் ஐந்தும் கிரந்த எழுத்துகளோடு இருந்தால் அசிங்கம் (absurrd) என்று எழுதியுள்ள சர்மா அவற்றைச் சேர்க்க முயலும் கணேசனுடன் சண்டையிட்டு இப்போது வெளிப்பட்டுள்ளார். கிரந்தத்தில் தமிழின் சிறப்பெழுத்துகள் ஐந்தையும் சேர்க்கக்கூடாது என்று தமிழக அரசு 06–11–2010 அன்று இந்திய அரசுக்கு எழுதியது. இதை தவறாகப் புரிந்து கொண்டு தினமணி 09-11-2010 அன்று ஆசிரிய உரை (தலையங்கம்) எழுதியது. ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ என்ற 5 கிரந்த எழுத்துகளைத் தமிழ் ஒருங்குகுறியில் சேர்க்கக் கூடாது என்றும் அதுவரை தமிழ் ஒருங்குகுறியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எழுதியதாகக் குற்றம் சாட்டியது. “தமிழில் பஞ்சாங்கம், ஜோதிட நூல்கள் அச்சிடுவோர் இந்தச் சொற்களை, வரிவடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, இவை கணினியில் இடம் பெறாமல் தடுப்பது முறையாகுமா?” என்று தினமணி எழுதியது. ஆனால் இந்த 5 எழுத்துகளுக்குமேல் விடுபட்டுள்ள 26 கிரந்த எழுத்துகளையும் சேர்க்க வேண்டும் என்பதுதான் சர்மாவின் கோரிக்கை. பஞ்சாங்கம், சோதிடம் ஆகியவற்றுடன் ஈட்டுரை பகவத்கீதை முதலிய வடமொழி நூல்கள் ஆகியவற்றை அச்சிட இந்த எழுத்துகள் தேவை என்று சர்மா கூறுகிறார். மறுபடியும் தமிழ் மொழியை மணிப்பவழ (பிரவாள) நடையாக மாற்ற வேண்டும் என்பது அவரது விருப்பம். வடமொழிக் கலப்பில் இருந்து தமிழை மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் மீட்டெடுத்து உள்ளது. இந்நிலையில் ஆங்கிலவழிக் கல்வியால் ஆங்கிலக் கலப்பு மொழி (தமிங்கிலம்) பெருகி வருகிறது. இத்துடன் கிரந்த வேற்றொலிகளைக் கலந்தால், மலையாளம் போல் தமிழ் கிளை மொழியாகிப் பின்னர் கலவைமொழி (கிரையோல்) ஆகிவிடும். ஏற்கனவே “கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா” சீரிளமை கொண்ட தமிழ் மொழியானது வடமொழி, ஆங்கிலக் கலப்பால் சிதைந்து வருவதை எண்ணி வருந்தியும், “தமிழினி மெல்லச் சாகும்” என்று கூறுபவர்களைப் பார்த்துப் பேதை என்று சாடியும் வருகிறோம். கிரந்த எழுத்துகள் முழுவதையும் சேர்த்து தமிழில் வடமொழிக் கலப்பை மிகுதி ஆக்கினால் மணிப்பவழம் (பிரவாளம்) இறுதியில் ‘மன்ய பிரவாளம்’ (மணிப்பவழம்) என வடமொழியும், ஆங்கிலமும் 90 விழுக்காடும், தமிழ் 10 விழுக்காடும் கலந்து பேச்சிலும் கிரந்தத் தமிழ் எழுத்திலும் வழங்கத் தொடங்கிவிடும். தமிங்கிலத்தில் (வியூயர்ஸ் கால் பண்ணுங்க, நியூசாங் வேணுமா... முதலிய பேச்சு வழக்குகளும், ciniமா, 4G செல்போன், குட்டீஸ்கள், ஐடியாக்கள்) இன்றுள்ள கலப்பு கிரந்தத் தமிழில் வரும். பிறந்த குழந்தையையும் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்துவிடுகிறோம். சிறுகுழந்தை தவறி விழுந்து அம்மா என்று அழுதபோது தமிழில் பேசாதே என்று மழலைப் பள்ளி ஆசிரியர் ஓங்கி அறைகிறார். “வீட்டில் தமிழில் பேசாதீர்கள்! நீங்கள் ஆங்கிலத்தில் பேசினால்தான் உங்கள் பிள்ளைகள் நன்றாகப் பேசும். ஆஸ்திரேலியாவில் சரியாக ஆங்கிலம் பேசாத 450 இந்தியர்களுக்கு வேலை போய்விட்டது தெரியுமா?” என்று தலைமை ஆசிரியர் கூறுகிறார். இனி வடமொழியில் பேசுங்கள் என்று கூறும் காலம் வந்துவிடும். வேலை வாய்ப்பு, வணிகமென்று ஆங்கிலம் புகுந்தது போல மதத்தை வைத்து வடமொழி புகுந்துள்ளது. பாலி, பிராகிருதம், பின்னர் சமற்கிருதம் ஆகியவை மதத்தின் மூலம் பல்லவர் ஆட்சிக் காலத்தில் செல்வாக்குப் பெற்று இலக்கியங்களிலும் சமய நூல்களிலும் ஆட்சியிலும் கல்வெட்டு செப்பேடுகளிலும் இடம் பெற்று இருந்தன. இதனை மாற்றிச் சமய எழுச்சி காலத்தில் தேவாரம் முதலியவைத் தோன்ற, அவை மறைக்கப் பட்ட போது, அவற்றை மீட்டெடுத்ததுடன் கல்வெட்டு செப்பேடுகளிலும் இலக்கியங்களிலும் தமிழை வளரச் செய்தவன் பேரரசன் இராசராசன். தூய தமிழில் அமைந்த ஆழ்வார் பாடல்களுக்கும் ஈட்டுரை என வடமொழியை மிகுதியாகக் கலந்து மணிப்பவழ நடையை திணித்தனர். அது தோல்வியுற்றது. இப்போது ஆங்கிலச் சொற்களையும் கிரந்த எழுத்துகளையும் கலந்து எழுதவேண்டும் என்போர் புறப்பட்டு உள்ளனர். தமிழ் எழுத்துகள் அங்கு சென்றால், தமிழுக்கு எழுத்து முறையே கிடையாது, வடபிராமியில் இருந்துதான் வந்தது என்று கூறிவிடுவார்கள். தமிழுக்கு முகமே கிடையாது என்று எழுதியவர்கள் அல்லவா! அதேபோல் தமிழில் கிரந்த எழுத்துகளும் அவற்றின் ஒலிகளும் சேர்ந்தால், தமிழ்மொழி விரைவில் தமிங்கிலமும் சமற்கிருதமும் கலந்த கிரந்தமொழி ஆகிவிடும். பாவாணர் சொல்வதுபோல் இரட்டைமடி மணிப்பிரவாளம் ஆகிவிடும். எனவே, நாம் தமிழில் கிரந்த எழுத்துகள் தமிழில் சேர்வதையும் எதிர்க்கிறோம் தமிழின் 5 சிறப்பெழுத்துகள் கிரந்தத்திற்குச் செல்வதையும் எதிர்க்கிறோம். நன்றி: தென்மொழி [தி.பி.2041,சிலை (திசம்பர்,2010) திங்களிதழில் வெளிவந்த கட்டுரை.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக